

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இந்த நிறுவனம் மலேசியாவில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாகவும், தங்களிடம் முதலீடு செய்தால் மாதம் 15 சதவீத வட்டி தரப்படும் எனவும் விளம்பரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை நம்பி அந்த நிறுவனத்தில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம் உறுதி அளித்தபடி வட்டியை தரவில்லை.
இதனால், ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள், தாங்கள் செய்த முதலீட்டுப் பணத்தை திருப்பிக் கேட்டனர். ஆனால், அந்த நிறுவனம் திருப்பி வழங்கவில்லை. இதனால் முதலீடு செய்தவர்கள், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவுஎஸ்.பி. ஜெயச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது நம்பிக்கை மோசடி, மோசடி செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கூறும்போது, "ஹிஜாவு நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் ரூ.360 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்ததாக புகார் அளித்துள்ளனர். அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான நேரு (49) என்பவரைக் கைது செய்துள்ளோம். இந்த நிறுவனம் மற்றும் இதன் 5 துணை நிறுவனங்களில் முதலீடு செய்து, பணத்தை இழந்தவர்கள் hijaueowdsp@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்" என்றனர்.