ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை: உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 பேர் ஒப்புதல்

உள்படம்: ராமஜெயம்
உள்படம்: ராமஜெயம்
Updated on
1 min read

திருச்சி: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர், தமிழகத்தைச் சேர்ந்த ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர்.

இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, திலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா (எ) குணசேகரன், கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1 ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர். அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி.தான் மனு தாக்கல் செய்ய முடியும் என எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அந்த வழக்கை நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயகுமார் மனு தாக்கல் செய்தார். பின்னர் வழக்கின் விசாரணை 7-ம் தேதி அன்று விசாரிக்கப்பட்டது. அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே, இது முறையாக பின்பற்றப்பட வாய்ப்பில்லை. என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து, அந்த வழக்கை 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உண்மை கண்டறியும் சோதனைக்கு சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ் குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி, உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். தென்கோவன் (எ) சண்முகம் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கில் மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில், அவர்கள் இம்மாதம் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in