

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸார், சென்னை பகுதியில் கன்டெய்னரில் பதுக்கிய, ரூ.50 லட்சம் மதிப்புள்ள 6 டன் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து சீனியர் எஸ்பி தீபிகா உத்தரவின் பேரில் தனி சிறப்புப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி சாரம் தென்றல் நகரில் உள்ள ஒரு வீட்டில், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ்தலைமையிலான போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
அங்கிருந்த மொத்த வியாபாரி மணிகண்டன் (22) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை போதைப் பொருட்கள் மற்றும் அவற்றை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.24.56 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் மணிகண்டனிடம் நடத்தியவிசாரணையில், சென்னை மதுராந்தகத்தை சேர்ந்த ஷாஜகான்(49), சத்தியமூர்த்தி(35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7.31 லட்சம் பணம், போதை பொருட்களை ஏற்றி அனுப்பும் மினி கன்டெய்னர் லாரி, சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் சென்னைசெங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரவி(38) என்பவரிடம் போதை பொருட்களை வாங்கியதாக கூறினர்.
இதையடுத்து சிறப்புப்படை போலீஸார் ரவியை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சென்னைசெங்குன்றத்தில், 2 கன்டெய்னர்கள் மற்றும் 2 லோடு கேரியர்களில் பதுக்கப்பட்ட, ரூ.50 லட்சம் மதிப்புள்ள, 6 டன்எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா போதைப் பொருட்கள் மற்றும் அந்த வாகனங்களையும் போலீஸார் கைப்பற்றினர். இதையடுத்து மரக்காணம் குமார் (31), சென்னை நடராஜன் (52), தூத்துக்குடியைச் சேர்ந்த கோபால்(30), மணிகண்டன் (24), ஆனந்த் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். டிநகர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட, வாகனங்களில் இருந்த போதை பொருட்களை புதுச்சேரி சீனியர் எஸ்பி தீபிகா பார்வையிட்டு போலீஸாரை பாராட்டினார். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.