Published : 02 Nov 2022 04:30 AM
Last Updated : 02 Nov 2022 04:30 AM

குடும்பத் தகராறில் விபரீதம்: அலங்காநல்லூரில் இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

மதுரை: மதுரை மாவட்டம், அலங்கா நல்லூரில் இரு மகன்களைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். தந்தையும் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (43). பூ விவசாயியான இவர், மதுரையிலுள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிகிறார். இவரது மனைவி தனலட்சுமி (37). இவர்களுக்கு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஹரிகிருஷ்ணன் (13), 7-ம் வகுப்பு படிக்கும் குபேந்திரகிருஷ்ணன்(12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கணவர் மீது மனைவிக்கு சந்தேகம் எழுந்த நிலையில், பூ விவசாயம் தொடர்பாகவும் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற அய்யனார் நள்ளிரவில் வீடு திரும்பினார். இந்நிலையில், தனலட்சுமியும், அவரது மகன்களும் இறந்து கிடப்பதும், அருகில் அய்யனார் மயங்கிய நிலையில் கிடப்பதும் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் 3 பேரின் உடல்களையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆபத்தான நிலையில் இருந்த அய்யனாரை, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அய்யனாருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன், மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டதும், இந்த விரக்தியில் தனலட்சுமி தனது இரு மகன்களுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

மனைவி, மகன்கள் இறந்த சோகத்தில் அய்யனாரும் விஷம் குடித்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x