

பெங்களூரு: கடந்த 2019-ல் பாதுகாப்பு படையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவதூறான வகையில் ஃபேஸ்புக்கில் கமெண்ட் செய்த 22 வயது நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இந்தக் குற்றத்தை செய்த நபரான ஃபையஸ் ரஷீத், 3.5 ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்து வருகிறார்.
சுமார் 40 சிபிஆர்எஃப் வீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். அதனை கொண்டாடும் வகையிலும், இந்திய ராணுவத்தை இகழ்ந்தும் தனது கருத்துகளை அவர் பதிவு செய்துள்ளார். முக்கியமாக புல்வாமா தாக்குதல் ஆதரவாக அவர் சுமார் டஜன் கணக்கிலான கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளார்.
இருந்தும் அந்த கமெண்ட்களை செய்தபோது அவருக்கு 19 வயதுதான் என்றும், அதனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர் சார்பில் வாதம் செய்யப்பட்டது. ஆனாலும் நீதிபதிகள் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
மேலும், குற்றவாளி ஒரு முறையோ, இரண்டு முறையோ கமெண்ட் செய்யவில்லை. அவர் இந்த தாக்குதல் தொடர்பாக செய்தி நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பதிவுகள் அனைத்திலும் கமெண்ட் செய்திருந்தார். அவர் ஒன்றும் சாமானிய மனிதன் அல்ல. அவர் இந்த குற்றத்தை செய்த போது பொறியியல் கல்லூரி படித்துக் கொண்டிருந்தார்.
24 கமெண்ட்டுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதோடு நாட்டுக்காக பணியில் இருந்தபோது உயிரிழந்த வீரர்களின் மரணத்தை அவர் கொண்டாடி உள்ளார். இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153 ஐ மற்றும் 201-இன் படி இது குற்றமாகும். சட்ட பிரிவு 13-இன் கீழும் இதற்கு தண்டனை விதிக்கலாம். அதனால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.