Published : 29 Oct 2022 06:42 AM
Last Updated : 29 Oct 2022 06:42 AM

பெண் ஊராட்சி தலைவரிடம் ரூ.77 லட்சம் மோசடி: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை, சிந்தாதிரிப்பேட்டை கலவை செட்டித் தெருவைச் சேர்ந்தவர் வி.பாரதி. இவர் நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ‘தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி பெற்றுத் தருவதாக கூறி தன்னிடம் ரூ.77 லட்சம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளேன்.இதே பகுதியில் திமுக கவுன்சிலராகவும் இருந்துள்ளேன். இந்நிலையில், வேலூரைச் சேர்ந்த எப்ரின் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் வேலூரைச் சேர்ந்த புவனேஷ் என்ற சரவணன், அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில், சரவணன் தமிழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளதாகவும், இதை டெல்லியில் பிரதமரின் உளவுத்துறை அதிகாரியாக இருக்கும் ஐஏஎஸ் பொறுப்பிலுள்ள எனது நண்பர் சசிகுமார் மூலம் பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இந்த பதவிக்காக தமிழக முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, பல்வேறு தவணைகளில் புவனேஷ், அவரது மனைவி ராஜலட்சுமி,அவர்களது கூட்டாளி சதீஷ் ஆகியோர் ரூ.77 லட்சம் பெற்றுக் கொண்டனர். ஆனால்,அவர்கள் கூறியதுபோல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை பெற்று தராமல் இழுத்தடித்ததால் பணத்தை திருப்பிக் கேட்டபோது பணம் தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே, என்னிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்றார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x