மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை: சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு 

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். மனைவி வேலைக்கு சென்ற பின், 12 வயது மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதேபோல கடந்த 2017-ம் ஆண்டு மே 20-ம் தேதி மகனை கடைக்கு அனுப்பி விட்டு, மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், சிறுமியின் தந்தை தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரை கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தந்தை மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in