

புதுடெல்லி: போதைப்பொருள் தடுப்பு துறையின் துணை இயக்குநர் (வடக்கு பிராந்தியம்) கியானேஷ்வர் சிங் நேற்று கூறியதாவது: மும்பை, டெல்லி பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து, டெல்லியின் திலக் நகர் பகுதியில் கடந்த 13-ம் தேதி சோதனை நடத்தினர்.
இதில் 4.9 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். இந்த போதைப்பொருள் மும்பையின் மசூதி பந்தர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. போதைப்பொருளை அந்தப் பெண்ணிடம் வழங்கிய எத்தியோப்பியாவைச் சேர்ந்த 2 பேரை 14-ம் தேதி கைது செய்தோம். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மும்பையின் மசூதி பந்தர் ஓட்டலுக்கு சென்ற என்சிபி அதிகாரிகள், ஒரு பெண் உட்பட 2 எத்தியோப்பியர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்பிலான 7 கிலோ கோகைனை பறிமுதல் செய்துள்ளனர். டெல்லியில் கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகளில் ஒருவர் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.