விருதுநகர் | தென்மண்டலங்களில் கைப்பற்றப்பட்ட ஒரு டன் கஞ்சா அழிப்பு
விருதுநகர்: ஆபரேஷன் 2.0 மூலமாக போலீஸாரால் கைப்பற்றப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான ஒரு டன் கஞ்சா போதை பொருள், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தனியார் ஆலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அழிக்கப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸாரால் கடந்த சில மாதங்களாக ஆபரேசன் 2.0 என்ற கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. இதில், தென் மண்டலத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்த சோதனைகளில் 960 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அ.முக்குளத்தில் உள்ள மருத்துவக் கழிவு எரியூட்டும் தனியார் ஆலைக்கு செவ்வாய்க்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது.
அதனை, தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், மதுரை சரக டிஜஜி பொன்னி, திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகர், மதுரை மாவட்ட எஸ்.பி சிவபிரசாத், திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் ஸ்ரீனிவாசன், திருச்சுழி டி.எஸ்.பி ஜெகநாதன், நரிக்குடி காவல் ஆய்வாளர் ராமநாராயணன் ஆகியோர் முன்னிலையில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 960 கிலோ எடையுள்ள கஞ்சா நவீன எரியூட்டும் இயந்திரங்கள் மூலம் எரித்து அழிக்கப்பட்டது.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், "கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் போலீஸாரால் போதை ஒழிப்பு சம்பந்தமாக தீவிர நடவடிக்கை எடுக்கபட்டது. குறிப்பாக ஆப்ரேஷன் 2.0 கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் தமிழகம் முழுவதும் 21 ஆயிரம் கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது.
கஞ்சா விற்றவர்களை பிடித்து முறையாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கைதான நபர்களின் ரூ.16 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பாதுகாக்கவும், அதை முழுமையாக அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்மண்டல பகுதிகளான மதுரை திண்டுகல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிடிக்கப்பட்ட சுமார் ஒரு டன் கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
