Published : 18 Oct 2022 04:20 AM
Last Updated : 18 Oct 2022 04:20 AM

சேர்ந்தமரம் அருகே 7-ம் வகுப்பு மாணவர் தற்கொலை விவகாரம்: உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம்

தென்காசி

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சீனு (12). இவர், அப்பகுதியில் உள்ள அரசுஉதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 14-ம் தேதி பள்ளிக்கு சென்ற சீனு, சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேர்ந்தமரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பள்ளி ஆசிரியர்கள் சிலர் சாதி பெயரைச் சொல்லி திட்டியதால் சீனு தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சீனுவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மாணவர் மரணம் விவகாரத்தில் ஆசிரியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும், அந்த பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும், உயிரிழந்த மாணவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியநாயகிபுரத்தில் சீனுவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் 4-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக வெளியூர்களில் இருந்து வர முயன்றவர்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மாணவர் உடல் பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x