மதுரையில் கஞ்சா கடத்திய தந்தை, மகன் கைது: அனுமதியின்றி வைத்திருந்த துப்பாக்கி பறிமுதல்

மதுரையில் கஞ்சா கடத்திய தந்தை, மகன் கைது: அனுமதியின்றி வைத்திருந்த துப்பாக்கி பறிமுதல்
Updated on
1 min read

மதுரையில் கஞ்சா கடத்திய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து அனுமதியின்றி வைத்திருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரையில் கஞ்சா விற்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இப்படையினர் காளவாசல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா, கத்தி, ஏர்கன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில், அவர்கள் மதுரை நேரு நகரைச் சேர்ந்த சரவணன் (54), அவரது மகன் ஜெயசூர்யபிரகாஷ்(28) எனத் தெரிய வந்தது. துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதி பெறவில்லை என்பதும் தெரிந்தது. துப்பாக்கி, கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in