Last Updated : 13 Oct, 2022 12:56 AM

 

Published : 13 Oct 2022 12:56 AM
Last Updated : 13 Oct 2022 12:56 AM

ராமநாதபுரம் | திமுக எம்எல்ஏ, நகராட்சி உறுப்பினர் தரப்புக்கு இடையே மோதல் - கவுன்சிலருக்கு கத்திக்குத்து

படம்: பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்ட நகராட்சி உறுப்பினர் பாக்கியராஜ் ஆதரவாளர்கள்.

ராமநாதபுரம்: பரமக்குடி எம்எல்ஏ தரப்பினருக்கும், திமுக நகராட்சி உறுப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் நகராட்சி உறுப்பினருக்கு இடுப்பில் கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 5-க்கும் மேற்பட்டோர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பாக்கியராஜ் மற்றும் திமுக பரமக்குடி வடக்கு நகர் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான ஜீவரெத்தினம் ஆகியோர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் நகரில் வைத்துள்ளனர். அதில் பரமக்குடி எம்எல்ஏ செ.முருகேசனின் படம் இடம் பெறவில்லை. இதுகுறித்து எம்எல்ஏ தரப்பைச் சேர்ந்த விக்னேஸ்வரன் கைபேசி மூலம் நகராட்சி உறுப்பினர் பாக்கியராஜிடம் கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பரமக்குடியில் நடந்த விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் எம்எல்ஏ தரப்பிற்கும், பாக்கியராஜ் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக எம்எல்ஏவிடம், பாக்கியராஜிடம் தன்னை மிரட்டச் சொன்னது நீங்கள் தானா என கைபேசியில் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த உரையாடலில் எம்எல்ஏ, எனது படத்தை போடாததால் எனது மகன் கேட்டிருப்பான் என்கிறார். அதற்கு பாக்கியராஜ் நீங்கள் பெரிய ரவுடி என எனக்கு தெரியாமல் போய்விட்டது என்கிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில் பரமக்குடி ஐந்துமுனைப்பகுதியில் உள்ள ஜீவரெத்தினம் வீட்டில் பாக்கியராஜ், ஜீவரெத்தினம் உள்ளிட்டோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு எம்எல்ஏ தரப்பினர் வந்துள்ளனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாக்கியராஜூக்கு இடுப்பில் ரத்தக்காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவரை பரமக்குடி அரசு மருத்துமவனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

அதன்பின் அவர் தன்னை எம்எல்ஏ மகன் துரைமுருகன் உள்ளிட்டோர் கத்தியால் குத்தியதாக போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் பரமக்குடி நகர் போலீஸார் துரைமுருகன், காமன்கோட்டையைச் சேர்ந்த அருண், காட்டுப்பரமக்குடியைச் சேர்ந்த பிரசாத், உரப்புளியைச் சேர்ந்த சம்பத், சத்திரக்குடியைச் சேர்ந்த விக்கி மற்றும் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே மாவட்டத்தில் அமைச்சர் தரப்பினர், மாவட்ட செயலாளர் தரப்பினர் என இரு கோஷ்டிகளாக திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்எல்ஏ தரப்பினருக்கும், திமுக நகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த மோதல் திமுக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பாக்கியராஜ் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பு நெடுஞ்சாலையில் நேற்று மாலை 15 நிமிடங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் அறிவுறுத்தலை அடுத்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x