Published : 12 Oct 2022 06:12 AM
Last Updated : 12 Oct 2022 06:12 AM

தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 2 பெண்கள் நரபலி - கேரளாவில் ஒருவர் கைது

கொலையுண்ட இரு பெண்கள் மற்றும் பகவால் சிங்

பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் எலந்தூர் கிராமத்தில் அண்மையில் 2 பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜு கூறியதாவது:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பகவால் சிங். இவரிடம் வரும் நோயாளிகளின் நோய்களை குணமாக்கி வந்தார். இவரது மனைவி லைலா. ஹீலிங் எனப்படும் இந்தத் தொழிலை இவர்கள் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பகவால் சிங்குக்கு பணம் செழிப்பதற்காகவும், வளத்தைப் பெருக்குவதற்காகவும் 2 பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுத்த விவரம் எங்களுக்குத் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பெரும்பாவூர் ஷபி (எ) ரஷீத் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகவால் சிங், லைலா இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளோம். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்.

எர்ணாகுளத்திலிருந்து அந்த 2 பெண்களையும் பணம் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றி அழைத்து வந்து கொலை செய்துள்ளனர். 2 பெண்களையும் மிகவும் கொடூரமான முறையில் கொன்றுள்ளனர். இது நரபலியாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

2 பெண்களின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு சென்றுள்ளோம். உயிரிழந்த 2 பெண்களும் லாட்டரி வியாபாரிகள். எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஸ்லின், பத்மா அவர்களது பெயர் எனத் தெரியவந்துள்ளது. இதில் பத்மா தமிழகத்தைச் சேர்ந்தவர்.

கைது செய்யப்பட்ட ஷபியிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளோம். அதைப் போலவே பகவால் சிங், லைலா ஆகியோரிடமும் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளோம். பகவால் சிங்குக்கு அதிக பணத்தேவை இருந்ததால் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஹைக்கூ கவிதை

பெண்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி அருகிலுள்ள பண்ணை வீட்டில் தீவைத்து எரித்துள்ளனர். இதுதொடர்பான தடயங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

ஹைக்கூ கவிதை எழுதுவதிலும் பகவால் சிங் வல்லவராம். ஹைக்கூ கவிதை எழுதவதற்காக தனி வகுப்புகளையும் பகவால் சிங் நடத்தி வந்துள்ளார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x