Published : 07 Oct 2022 04:25 AM
Last Updated : 07 Oct 2022 04:25 AM

சிதம்பரம் | சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை

கடலூர்

சிதம்பரம் அருகேயுள்ள வாக்கூர் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (57). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 24.11.2021 அன்று அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். உடன் அவரது தாய் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று, அசோக்குமாரிடம் தட்டிக் கேட்டுள்ளனர்.

தொடர்ந்து சிறுமியின் தாய் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து அசோக் குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.

அசோக்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் கருதி, அவருக்கு சமூக நலத்துறை மூலமாக, அரசின் ஏதாவது ஒரு நிதியில் ரூ.2 லட்சம் இழப்பீட்டுத் தொகையை 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக கலாச் செல்வி ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x