

தேன்கனிக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.14 லட்சத்து 24 ஆயிரத்தை நூதன முறையில் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை தாலுகா குந்துகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாகபூஷன் (70). ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். இவரது செல்போனுக்கு ஜூன் 20-ம் தேதி குறுந்தகவல் வந்தது.
அதில், தனியார் செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால் மாதந்தோறும் ஒரு தொகை கொடுக்கப்படும் என்கிற தகவல் இடம் பெற்றிருந்தது. இதைநம்பி அவர் குறுந்தகவலில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார்.
அதில் பேசியவர் செல்போன் டவர் அமைக்க நடைமுறை செலவுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்கள் கூறியபடி 3 வங்கிக் கணக்கில்பல தவணையாக ரூ.14 லட்சத்து 24 ஆயிரத்தை நாகபூஷன் செலுத்தியுள்ளார். பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகபூஷன் இதுதொடர்பாக நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவு போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.