கூடுவாஞ்சேரியில் ரவுடி கொலை: 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலை

சந்துரு
சந்துரு
Updated on
1 min read

மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி வைகோ என்கிற சந்துரு (28). இவர் தாம்பரம் பகுதியின் பிரபல ரவுடியான லெனினின் கூட்டாளியாக இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன் பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் கஞ்சா விற்பனை வழக்கிலும் சிறை சென்று திரும்பியுள்ளார்.

இவருக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையையும் மனைவியையும் பார்ப்பதற்காக கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம், புவனேஸ்வரி அம்மன் நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு நேற்று சந்துரு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் 4 இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டில் புகுந்து பட்டப்பகலில் சந்துருவை அரிவாளால் வெட்டி தலையை சிதைத்தது.

இதில் சம்பவ இடத்திலேயே சந்துரு உயிரிழந்தார். தடுக்க முயன்ற மனைவி வினிதாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சந்துரு மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 18 வழக்குகள் உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீஸார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாம்பரம் காவல் துணை ஆணையாளர் சி.பி. சக்கரவர்த்தி, கூடுவாஞ்சேரி சரக காவல் உதவி ஆணையாளர் சிங்காரவேலன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in