

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள், முன்ஜாமீன் கோரும்போது அதை மறுக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை கொண்டுவர மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
இதற்காக குற்றவியல் தடுப்புச் சட்டம் 438-ன் சிலபிரிவுகளில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் கோரி மாநில அரசுக்கு மாநில உள்துறை சார்பில் முன்வரைவு மசோதா அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் புகார்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் மரபணு மற்றும் உயிரியல் ஆதாரங்களை உடனுக்குடன் சேகரிப்பதை உறுதி செய்வதும், அத்தகைய உயிரியல் சான்றுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதும், சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்பைக் குறைப்பதும், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தடுப்பதும் சட்டத் திருத்தத்தின் நோக்கமாகும்.
உ.பி. அரசு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (உத்தர பிரதேசம்) பிரிவு 438-ல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) குற்றங்களையும், முன்ஜாமீன் வழங்குவதில் உள்ள விதிவிலக்குகளில் பாலியல் தொடர்பான குற்றங்களையும் உள்ளடக்கிய திருத்தம் தொடர்பான முன்வரைவையும் அரசுக்கு அனுப்பியுள்ளது. விரைவில் அரசின் ஒப்புதல் பெற்று இந்த சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.