

சென்னை: சென்னை பல்லாவரத்தில் 56 கிலோ கஞ்சாவை விற்க முயன்ற வழக்கில், தேனியைச் சேர்ந்த நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஜமீன் பல்லாவரத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி பல்லாவரம் போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அங்கு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாண்டியன், கதிரேசன், மணிமாறன் மற்றும் தெய்வம் ஆகிய நான்கு பேர் கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார், 56 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து அவர்களுக்கு எதிராக போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா, வழக்கில் பாண்டியன் உள்பட 4 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், "போதைப்பொருள் பயன்பாடு என்பது ஒரு சமூக நோய். போதைப்பொருள் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மட்டுமல்லாமல், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சமீப காலங்களில் இளம் பருவத்தினர் போதைப்பொருள் பயன்படுத்துவது ஆபத்தான விகிதத்தில் உள்ளது. இது ஒட்டுமொத்த சமூகத்திலும் கொடிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.