கோவை | முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாக கூறி ரூ.3.72 கோடி மோசடி: கணவன், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவை | முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாக கூறி ரூ.3.72 கோடி மோசடி: கணவன், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை
Updated on
1 min read

முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாக கூறி ரூ.3.72 கோடி மோசடி செய்த கணவன், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், ரங்க பாளையத்தைச் சேர்ந்தவர் வி.சிவசேனாபதி. இவரது மனைவி மோகன பிரியதர்ஷினி, தாய் பத்மாவதி, குமார் என்கிற குமரவேல் ஆகியோர் இணைந்து சிவா ஈமு பார்ம்ஸ், சிவா அக்ரி பவுல்ட்ரி பார்ம்ஸ், சிவா புரமோட்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தனர். இதில், சிவா ஈமு பார்ம்ஸ் நிறுவனம் திருப்பூர், காங்கயம் சாலையில், ரங்கபாளையத்தில் இயங்கி வந்தது. அதன் கிளைகள், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், உடுமலைப் பேட்டை, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்தன. இந்த நிறுவனங்கள் ஏதும் முறையாக பதிவு செய்யப்படவில்லை.

நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினர்.இதனை நம்பி மொத்தம் 373 பேர் ரூ.3.72 கோடி முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி பணம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, கோவை வீரகேரளத்தைச் சேர்ந்த ஏ.சுரேஷ்பாபு கடந்த 2013-ம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு குமரவேல் உயிரிழந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஏ.எஸ்.ரவி நேற்று தீர்ப்பளித்தார். வி.சிவசேனாபதி, மனைவி மோகன பிரியதர்ஷினி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2.42 கோடி அபராதம் விதித்ததோடு, நேரில் ஆஜராகாததால் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இந்த வழக்கிலிருந்து பத்மாவதி விடுவிக்கப்பட்டார். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சி.கண்ணன் ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in