Published : 20 Sep 2022 02:18 PM
Last Updated : 20 Sep 2022 02:18 PM

திருப்பூர் அரசு வழக்கறிஞர், அவரது மகளைக் கொல்ல முயன்ற வழக்கில் இளைஞர் கைது

கைதான ரகுமான் கான்

திருப்பூர்: திருப்பூர் அரசு வழக்கறிஞர், அவரது மகளைக் கொல்ல முயன்ற வழக்கில், சட்டம் படித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் ஜமீலா பானு (42). திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி தனது மகள் அமிர்நிஷாவுடன் (20) குமரன் சாலையில் இருந்த அலுவலகத்தில் இருந்தபோது, திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த ரகுமான்கான் (25) என்பவர், அரிவாளால் வெட்டி அங்கிருந்து தப்பினார். தன்னை அமிர்நிஷா காதலிக்க மறுத்ததால், அவரையும், அவரது தாயையும் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான ரகுமான்கானை தேடி வந்தனர். மாநகரக் காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவுப்படி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இதையடுத்து, கேரளா மாநிலம் வளிமேட்டில் வைத்து தனிப்படை போலீஸார் இன்று கைது செய்தனர். இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, ''கைது செய்யப்பட்ட ரகுமான்கான் சேலம் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர். அங்கு படிக்கச் சென்ற, அரசு வழக்கறிஞர் மகளுக்கு காதலிக்குமாறு வலியுறுத்தி தொந்தரவு அளித்துள்ளார். இதையடுத்து அங்கு போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரகுமான்கானை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், பிணையில் வெளியே வந்தவர், அரசு வழக்கறிஞர் மற்றும் அவரது மகளை அரிவாளால் வெட்டிக் கொலை முயற்சியில் ஈடுபட்டு தலைமறைவானார். இதையடுத்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் ஜமீலா பானுவும், அவரது மகளும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x