Published : 16 Sep 2022 06:34 AM
Last Updated : 16 Sep 2022 06:34 AM

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு: மாமல்லபுரம் அருகே பாதிரியார் கைது

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியாரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

கல்பாக்கம் வயலூரைச் சேர்ந்தவர் பாதிரியார் சார்லஸ்(58). இவர் கல்பாக்கத்தில் கிறிஸ்துவ பிராட் டிரஸ்ட் என்ற விடுதியை 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளார். இவர் மீது கல்பாக்கம் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இவர் நடத்தி வந்த விடுதியில் தங்கி இருந்த சிறுமிக்கு பாதிரியார் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீஸார், பாதிரியார் சார்லஸைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பாதிரியார் சார்லஸ், நேற்று ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து மகளிர் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோயம்பேடு போலீஸார் உதவியுடன் அவரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x