

ராஜபாளையம் அருகே ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இறந்தவரின் உடலை கிராம மயானத்தில் தகனம் செய்யக் கூடாது எனக் கூறி, மக்கள் போராட்டம் நடத்தினர். போலீஸார் சமசரம் செய்ததை அடுத்து இறந்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
ராஜபாளையம் சொக்கநாதன் புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மேலூர் துரைசாமிபுரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலை பராமரித்து வந்த ஒரு தரப்பினர், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறினர். இந்த விவகாரத்தில் 15 குடும்பத்தினரை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர்.
இந்நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பாலுவண்ணநாதன் நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். அவரது உடலை ஊரில் உள்ள மயானத்தில் தகனம் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் மற்றும் போலீஸார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து நேற்று பிற்பகல் பாலுவண்ணநாதனின் உடல் அந்த ஊரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.