மனைவியின் தங்கை கடத்தல் வழக்கில் கூடலூர் காவல் உதவி ஆய்வாளர் பணி நீக்கம்

மனைவியின் தங்கை கடத்தல் வழக்கில் கூடலூர் காவல் உதவி ஆய்வாளர் பணி நீக்கம்
Updated on
1 min read

மனைவியின் தங்கையை கடத்திய வழக்கு தொடர்பாக, கூடலூர் காவல் உதவி ஆய்வாளரை பணிநீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, "ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (35). இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு கோபி மதுவிலக்கு துறையில் உதவி ஆய்வாளராக வெங்கடாசலம் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், மனைவியின் தங்கை (சித்தப்பா மகள்) திவ்யபாரதி (24) என்பவரை திருமணம் செய்ய வேண்டுமென்ற விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்காகபல்வேறு வகையில் திட்டமிட்டுள்ளார்.

2018-ம் ஆண்டுபி.எட். படித்து வந்த திவ்யபாரதியிடம் மதுரையிலுள்ள கோயிலுக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, மனைவி மற்றும் அவரது தங்கையுடன் ஈரோட்டில் இருந்து மதுரைக்கு காரில் சென்றுள்ளனர்.

மதுரைக்கு முன்னர், காவல் சோதனைச்சாவடியில் மனைவியை இறக்கிவிட்டு, தங்கையை மட்டும் மதுரைக்கு கடத்தி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, சோதனைச்சாவடியில் இருந்த போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, அவர் பணிபுரிந்த அந்தியூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

மதுரை நெடுஞ்சாலைத்துறை போலீஸாரின் உதவியுடன்மதுரைக்கு செல்லும் வழியில் வெங்கடாசலத்தை மடக்கிப் பிடித்து அந்தியூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே அந்தியூர் காவல் ஆய்வாளர் ரவி தலைமை யிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்ததில், மனைவியின் தங்கையை கடத்திச் சென்றது உறுதியானது. இதுதொடர்பாக கடத்தல் வழக்கு பதிந்து, வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் வெங்கடாசலம் பணியில் சேர்ந்தார். கரோனா காலகட்டத்தில், நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல் நிலையத்துக்கு அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கடத்தல்வழக்கு தொடர்பாக வெங்கடாசலத்தை பணிநீக்கம் செய்து, கோவை சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in