Published : 05 Sep 2022 04:00 AM
Last Updated : 05 Sep 2022 04:00 AM

பள்ளியில் மகளை விட நன்றாக படித்ததால் குளிர்பானத்தில் விஷம் கலந்து 8-ம் வகுப்பு மாணவர் கொலை: சக மாணவியின் தாய் கைது

பால மணிகண்டன்

காரைக்கால்

தனது மகளை விட நன்றாக படித்ததால், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 8-ம் வகுப்பு மாணவனை கொன்ற புகாரில் சக மாணவியின் தாய் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி மாணவரின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரைக்கால் நேரு நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ரேஷன் கடை விற்பனையாளர். இவரது மனைவி மாலதி. இவர்களது 2-வது மகன் பால மணிகண்டன்(13), நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நன்றாக படித்து வந்ததுடன், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

இதனிடையே, பள்ளியில் செப்.2-ம் தேதி நடைபெற்ற ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பிற்பகலில் வீடு திரும்பிய பால மணிகண்டனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பெற்றோர் விசாரித்ததில், உறவினர் கொடுத்ததாக பள்ளிக் காவலாளி கொடுத்த குளிர்பானத்தை குடித்ததில் இருந்து வாந்தி ஏற்பட்டு வருவதாகக் கூறினார்.

இதையடுத்து, பால மணிகண்டனின் பெற்றோர் அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பள்ளிக்குச் சென்று விசாரித்தனர்.

அங்கு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், பால மணிகண்டன் வகுப்பில் பயிலும் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா(46) பால மணிகண்டனின் உறவினர் கொடுத்ததாகக் கூறி பள்ளிக் காவலாளி தேவதாஸிடம் குளிர்பானத்தை கொடுத்தது தெரியவந்தது.

அவ்வப்போது திட்டி வந்தார்: பின்னர், இதுதொடர்பாக காரைக்கால் போலீஸில் மாணவரின் பெற்றோர் புகார் அளித்தனர். அதில், தங்களது மகன் பால மணிகண்டன், சகாயராணி விக்டோரியாவின் மகளை விட நன்றாக படித்ததால், தங்களது மகனை அவர் அவ்வப்போது திட்டி வந்ததாகவும், இதன் தொடர்ச்சியாக பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டிருந்த பால மணிகண்டனுக்கு அவர் விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்ததாகவும் கூறியிருந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், பால மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கத் தவறியதாலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனையைக் கண்டித்தும், போலீஸார் உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியும், பால மணிகண்டனின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, மருத்துவமனையில் மேஜை, கதவு கண்ணாடிகள் உள்ளிட்ட சில பொருட்களை சேதப்படுத்தினர்.

3 மருத்துவர் குழு பரிசோதனை: நேற்று காலை தகவல் அறிந்து வந்த மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தைக் கைவிடச் செய்தார். பின்னர், ஜிப்மர் மருத்துவர் உள்ளிட்ட 3 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.

பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக காரைக்கால் நகர போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, சகாயராணி விக்டோரியாவை கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் தெரியவந்தது: இதுகுறித்து போலீஸார் கூறும்போது, பள்ளியில் உள்ள சிசிடிவி பதிவு மூலம் பள்ளிக் காவலாளியிடம் சகாயராணி விக்டோரியா குளிர்பான பாட்டில்களை வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், அந்த குளிர்பானத்தில் ஏதோ விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சகாயராணி விக்டோரியா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

இது தொடர்பாக மாணவரின் உறவினர்கள் கூறியது; மருத்துவமனை மீது குற்றச்சாட்டு: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் மாணவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. சாதாரண வார்டிலேயே அவரை வைத்திருந்தனர். இரவு 10 மணியளவில் அவரது உடல்நிலை மோசமான பிறகே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். மருத்துவமனையில் போதுமான சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையில், மருத்துவர்கள் உரிய கவனம் செலுத்தி அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவமனையின் அலட்சியமே மாணவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x