சென்னை தி.நகரில் போதையில் போலீஸ் பூத்தை அடித்து நொறுக்கிய கும்பல்: 4 பேரிடம் விசாரணை

சென்னை தி.நகரில் போதையில் போலீஸ் பூத்தை அடித்து நொறுக்கிய கும்பல்: 4 பேரிடம் விசாரணை
Updated on
1 min read

சென்னை தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த பணியில் மேஸ்திரி லோகநாதன் (43) உட்பட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆட்டோக்களில் போதையில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், மழைநீர் வடிகால் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருட முயற்சித்துள்ளனர்.

இதை பார்த்த மேஸ்திரி மற்றும் பணியாளர் அவர்களை தடுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர்கள், அங்கிருந்த கற்களை கொண்டு அவர்கள் மீது வீசினர். மேலும்,கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மேஸ்திரிலோகநாதனையும் குத்தியுள்ளனர். அதில் அவருக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து, அங்கிருந்த பாண்டிபஜார் போக்குவரத்து காவல் துறையின் பூத் மீது கற்களை வீசியும்,கட்டைகளால் அடித்து நொறுக்கியும் உள்ளனர்.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. தகவல் கிடைத்துவந்த தேனாம்பேட்டை போலீஸார், லோகநாதனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் 4 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in