Published : 04 Sep 2022 04:30 AM
Last Updated : 04 Sep 2022 04:30 AM

ராமநாதபுரம் | சொகுசு கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.6.67 லட்சம் மோசடி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே பெண் ணிடம் சொகுசு கார் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி ரூ. 6.67 லட்சத்தை ஆன்லைன் மூலம் மூலம் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்திரக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மனைவி சுகன்யாதேவி(29). இவர் ஆன்லைன் நிறுவனத்தில் தொடர்ந்து துணிகள் ஆர்டர் செய்து வாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது மொபைல்போனுக்கு கடந்த ஆகஸட் 8-ம் தேதி அந்த நிறுவனத்தின் 7-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற குலுக்கலில், ரூ.12.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக கிடைத்துள்ளதாக கடிதம் ஒன்று வந்துள்ளது.

அதனையடுத்து, ஒரு மொபைல் எண்ணில் இருந்து தொடர்புகொண்ட நபர் காரை பரிசாக பெறலாம் அல்லது அதற்கான தொகையை பெறலாம் எனக்கூறியுள்ளார்.

அதற்கு சுகன்யாதேவி பணமாகத் தரும்படி கூறியுள்ளார். அப்படி என்றால், அதற்கு ரூ.12,800 முதலில் செலுத்த வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார். மேலும் அதற்காக வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் எண், பான் கார்ட் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் அனுப்பச் சொல்லியுள்ளார். மேலும் அந்த நபர் பரிசை பெற பல தவணைகளில் பணம் அனுப்பச் சொல்லியுள்ளார்.

அதை நம்பிய சுகன்யாதேவியும் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை ரூ.6,67,900 -ஐ படிப்படியாக அந்த நபரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி உள்ளார். ஆனால், கூறியபடி பரிசுத்தொகையை அனுப்பவில்லை. சுகன்யாதேவி அளித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x