Last Updated : 01 Sep, 2022 04:27 PM

 

Published : 01 Sep 2022 04:27 PM
Last Updated : 01 Sep 2022 04:27 PM

டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் ஜாமீன் ரத்தாகுமா? - ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை: டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் வசந்தி. இவர் இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், வசந்திக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரை டிஎஸ்பி சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வசந்திக்கு ஜாமீன் வழங்கிய போது, சாட்சிகளை கலைக்கக் கூடாது, தடயங்களை அழிக்கக் கூடாது என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் பல்வேறு விதித்தது. இந்த நிபந்தனைகளை பின்பற்றாமல் வழக்கின் சாட்சிகளை கலைக்கும் நோக்கத்தில் வசந்தி செயல்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "காவல் ஆய்வாளர் வசந்தி உயர் நீதிமன்ற நிபந்தனைகளை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை சந்தித்து சமரசம் பேசியுள்ளார். இதையடுத்து வழக்கில் இரு தரப்பும் சமாதானமாக செல்ல அனுமதி கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

வசந்தியின் செயல்பாடு உயர் நீதிமன்ற நிபந்தனை மீறி சாட்சிகளை மிரட்டும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை வசந்தி மீறியுள்ளார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்" என்றார். இதையடுத்து மனு தொடர்பாக வசந்தி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x