Last Updated : 01 Sep, 2022 04:47 PM

 

Published : 01 Sep 2022 04:47 PM
Last Updated : 01 Sep 2022 04:47 PM

தாவூத் இப்ராஹிம் | மும்பை டான் டூ சர்வதேச பயங்கரவாதி: என்ஐஏவின் ரூ.25 லட்ச சன்மான அறிவிப்பும் பின்புலமும்

தாவூத் இப்ராஹிம் | கோப்புப் படம்

மும்பை: தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. அதேபோல் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான சோட்டா ஷகீல் பற்றிய தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சமும், அனீஸ் இப்ராஹிம், ஜாவேத் சிக்னா, டைகர் மேமன் ஆகியோரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் குவைதா ஆகியனவற்றுடன் நெருங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாவூத் இப்ராஹிம் பற்றி பேசிய இந்தியா, 1993 மும்பை குண்டு வெடிப்பின் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் மற்றும் ஐ.நா.வால் பயங்கர தீவிரவாதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பலரும் அண்டை நாட்டால் ஆதரித்து பாதுகாக்கப்படுகின்றனர் என்று பாகிஸ்தானின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடாமல் குற்றஞ்சாட்டியுள்ளது. தாவூத் இப்ராஹிமை கைது செய்வதில் சர்வதேச ஒத்துழைப்பை நாடுகிறோம் என்றும் இந்திய தெரிவித்திருந்தது. 1993ல் இருந்து 2022 வரை இந்தியாவால் தொடர்ந்து தேடப்படும் குற்றவாளியாகவே இருக்கிறார் தாவூத் இப்ராஹிம்.

டோங்ரி டூ துபாய்: மும்பை நிழல் உலகம் பற்றி பேசினால் இந்தப் புத்தகத்தை தவிர்த்து முடியாது. ஹுசைன் ஜைதி என்ற புலனாய்வு பத்திரிகையாளர் காந்த 2012ல் இந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் மும்பையில் தங்கக் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, பாலிவுட்டில் பணப் பறிப்பு என்ற குற்றங்களைச் செய்து கொண்டிருந்தவர்கள் எப்படி திட்டமிட்ட பெருங் குற்றங்களைச் செய்யும் மாஃபியாக்களாக, டான்களாக மாறினர் என்பதை விவரித்திருக்கும். 60 ஆண்டு கால டான் ரத்த வரலாற்றை விவரித்திருக்கிறது. அதில் தாவூத் இப்ராஹிம் தான் நொட்டோரியஸ் ஹீரோ. ஆம் மும்பையின் டோங்ரி பகுதியில் தனது குற்றச் செயல்களை ஆரம்பித்த தாவூத் இப்ராஹிம் எப்படி சர்வதேச பயங்கரவாதியாக துபாயில் தனக்கொரு சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்தது என்பதை விவரித்திருக்கும். இந்தப் புத்தக்ம் ஷூட்அவுட் அட் வதாலா என்ற பெயரில் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டது.

தாவூத் இப்ராஹிமின் டி கம்பெனி ஆரம்பித்தில் தங்கக் கடத்தல், கள்ள நோட்டு அச்சிடுதல் என்று அட்டகாசம் செய்துவந்தது. 1993ல் மும்பையில் ஒரே நேரத்தில் பல்வேறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதற்கு தாவூத் இப்ராஹிம் உதவி செய்தார். இந்த குண்டு வெடிப்பில் 250 பேர் உயிரிழந்தனர்.

ரத்தம் தெறிக்கும் டைம்லைன்:

1955: தாவூத் இப்ராஹிம் கஸ்கர். மும்பையில் 1955ல் பிறந்தார். மத்திய மும்பையின் டோங்ரி பகுதியில் வளர்ந்தார். தாவூத்தின் தந்தை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். ஆனால் 'போலீஸ் பிள்ளை திருடன்' என்று கிண்டலாக சொல்லப்படும் சொலவடை போல் தாவூத் சிறு வயதிலிருந்தே திருட்டு, கொள்ளை, ஏமாற்று வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

1974: அப்போது தாவூத்துக்கு வயது 19. தாவூத்துக்கும் ஹாஜி மஸ்தானுக்கும் நல்ல உறவு ஏற்படுகிறது. அப்போது மும்பையின் டானாக இருந்தவர் இந்த ஹாஜி மஸ்தான். தாவூத் ஹாஜி மஸ்தானுக்கு வலது கை ஆகிறார். ஆனால் ஹாஜி மஸ்தானுக்கு முடிவு கட்ட நினைத்த மும்பை போலீஸ் பேக் டோர் என்ட்ரி போல் தாவூத்துடன் சமரசம் பேசுகிறது. தாவூத்தை தூண்டிவிட்டு மஸ்தானுக்கு முடிவு கட்டச் சொல்கிறது. எப்போதும் இரண்டாம் இடம் தானா என்று உள்ளூர தவித்துக் கொண்டிருந்த தாவூத்துக்கு இது தெம்பைக் கொடுத்தது. அதனால் மும்பையில் ஹாஜி மஸ்தான், தாவூத் இப்ராஹிம் என இரு குழுக்கள் உருவாகின.

1981: மஸ்தான் ஆட்கள் ஒருவழியாக தாவூத்தையும் அவரது சகோதரர் ஷபீரையும் சுற்றிவளைக்க ஷபீர் சுட்டுக் கொல்லப்படுகிறார். தாவூத் மயிரிழையில் உயிர் பிழைத்ததாக செய்திகள் வெளியாகிறது.

1984: சகோதரர் கொலைக்கு பழிவாங்க தாவூத் எடுத்த ஆக்‌ஷன் ப்ளானில் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் கொல்லப்படுகின்றனர். இப்படி மாறிமாறி கேங் வார் வலுக்க மஸ்தானையும், தாவூத்தையும் மோதவிட்ட மும்பை போலீஸுக்கு பிரச்சினை இரண்டு மடங்கு அதிகமானது. தாவூதுக்கு என்கவுன்ட்டர் ஸ்கெட்ச் போட்டது போலீஸ். ஆனால் துபாய் தப்பி ஓடிய தாவூத் இப்ராஹிம் அங்கு வெள்ளை மாளிகை என்ற பெரும் பங்களாவை உருவாக்கினார். துபாய் பங்களாவில் கொலை, கொள்ளைக் கும்பல் தலைவர்களுக்கும், பாலிவுட் பிரபலங்களுக்கும் விருந்து நடைபெறும். தாவூத் உருவாக்கிய டி கம்பெனி இன்னும் வலுவானது. சோட்டா ஷகீல் கைகளில் பெரும் பொறுப்பு சேர்ந்தது.

1991: அப்போதுதான் இந்தியா தாராளமயமாக்குதலில் கால் பதித்திருந்தது. அதனால் ஜப்பானிய டிவிக்களும், சீன ரேடியோக்களும் சட்டபூர்வமாகவே இறக்குமதி செய்ய முடிந்தது. அதனால் தாவூத் கப்பல்களில் கடத்தி வரும் பொருட்கள் குறைந்தது. மும்பை துறைமுகத்தில் தாவூத்தின் ஆதிக்கம் குறைந்தது. அந்த வருடம் தான் மும்பையில் போலீஸாருக்கும் தாவூத் கும்பலுக்கும் இடையே ஒரு பெரும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இது தேசிய அளவில் ஊடக கவனம் பெற்றது.

1993: மும்பையில் ஒரே நேரத்தில் 13 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. அதில் 250 பேர் கொல்லப்பட்டனர். அப்போது எஃப்பிஐயும், இன்டர்போல் அமைப்பும் தாவூத் இப்ராஹிமை வான்டட் லிஸ்டில் சேர்த்தது. தாவூத் கராச்சி தப்பிச் சென்றதாக தகவல். தாவூத் அங்கு லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு நிதியுதவி செய்ய ஆரம்பிக்கவே இன்னும் சர்வதேச கவனம் பாய்ந்தது.

2003: இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து தாவூத் இப்ராஹிமை சர்வதேச பயங்கரவாதி அறிவித்தது. தாவூத் தலைக்கு அப்போது 25 மில்லியன் டாலர் விலை முன்வைக்கப்பட்டது.

2008: நவம்பர் 26 2008ல் மும்பைக்குள் நுழைந்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் படுகொலைகளை நிகழ்த்தினர். லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த அந்த 10 பேரும் மும்பை நகருக்குள் வர தாவூத் இப்ராஹிம் தான் உதவினார் என்பது குற்றச்சாட்டு.

2013: காலம் மாற மாற தாவூத்தின் கொள்ளைத் திட்டம் தான் மாறியதே தவிர தாவூத் சிக்கவில்லை. ஐபிஎல் விளையாட்டுகளில் பெட்டிங்கில் ஈடுபடத் தொடங்கிய தாவூத் சகோதரர் அனீஸ் மூலம் அதில் கோலோச்ச ஆரம்பித்தார். தாவூத்தின் டி கம்பெனி தான் இன்று உலகில் நடைபெறும் கிரிக்கெட் பெட்டிங் மூன்றில் இரண்டில் ஆதிக்கம் செலுத்துகிறது.

2015: இந்தோனேசியாவின் பாலி நகரில் சோட்டா ராஜன் கைது செய்யப்படார். ஆனால் தாவூத் இப்ரஹிமை நெருங்க முடியவில்லை. இப்போது மும்பை டான் அல்ல தாவூத். சர்வதேச அளவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் கிங்பின். தெற்காசியாவையும் தாண்டி ஆப்பிரிக்காவின் பொகோ ஹராம் தீவிரவாதிகளுக்குக் கூட தாவூத் நிதியுதவி செய்து வருகிறார்.

இந்நிலையில்தான் மீண்டும் தாவூத் இப்ராஹிம் பற்றிய தகவலுக்கே ரூ.25 லட்சம் என்ற அறிவிப்புடன் மீண்டும் தேடுதலை வேகப்படுத்தியுள்ளது.

என்ன செய்கிறார் தாவூத்தின் வாரிசு? - தாவூத் இப்ராஹிமின் மகன் மோயின் நவாஸ் டி.கஸ்கர். இவருக்கு 36 வயதாகிறது. இவர் மதகுரு ஆகிவிட்டார். தனது தந்தையின் சட்டவிரோத வாழ்க்கையை வெறுப்பதாகக் கூறி மோயின் மவுலானா ஆகிவிட்டார். இத்தகவலை கடந்த 2017ல் தி இந்து ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தானே ஆன்ட்டி எக்ஸ்டார்ஷன் செல் பிரிவு தலைவர் பிரதீப் சர்மா கூறியிருந்தார். தாவூத்துக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். மஹ்ருக் என்ற மகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியான்டடின் மகன் ஜுனைத்தை திருமணம் முடித்துள்ளார். இளைய மகள் மஹ்ரீன் அமெரிக்க தொழிலதிபரின் வாரிசை மணமுடித்துள்ளார். இந்நிலையில் மகன் மோயின் கஸ்கர் மவுலானா ஆகிவிட்டதால் தனக்குப் பின்னர் தனது டி கம்பெனி சாம்ராஜ்யத்திற்கு 'தலைவன்' இல்லை என்ற வருத்ததில் இருக்கிறாராம் தாவூத் இப்ராஹிம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x