சிறுமி தற்கொலை வழக்கில் ஈரோடு இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி தற்கொலை வழக்கில் ஈரோடு இளைஞருக்கு ஆயுள் தண்டனை

Published on

சிறுமி தற்கொலை வழக்கில், அவரை தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (22). இவர் தனது செல்போனில் அப்பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் சிறுமியின் புகைப்படத்துடன் அவர் இருப்பது போல், ‘மார்பிங்’ செய்து பலருக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், பாலியல் உறவு வைத்துக் கொள்ள சிறுமியை வற்புறுத்தியதோடு, மறுத்தால் தவறாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், அச்சமடைந்த சிறுமி கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக கொடுமுடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய நந்தகுமாரை,போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நந்தகுமாருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எம்.ஜெயந்தி ஆஜரானார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in