

விழுப்புரம்: நடிகை அமலா பால் தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவ்நிந்தர் சிங் தத் என்பவரை விழுப்புரம் காவல் துறையினர் கைது செய்தனர்.
‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். ‘மைனா’ திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதுப்புவது எப்படி, தலைவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அமலா பால் திரைப்படத் தொழிலில் ஏற்பட்ட நட்பு காரணமாக பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அவருடன் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரிடமும் அமலா பால் நெருங்கிய நட்புடன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பவ்நிந்தர் சிங் தத் என்கிற பூவி குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அமலா பால் திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கியதாக கூறப்படுகிறது. அந்நிறுவனத்துக்காக 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரிய முதலியார் சாவடியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்திருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமலா பாலுடன் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக பவ்நிந்தர் சிங் தத் மிரட்டல் விடுத்திருக்கிறார். இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 26-ம் தேதி அமலா பால் தரப்பில் விக்னேஸ்வரன் புகார் அளித்தார்.
இந்த புகாரில், பவ்நிந்தர் சிங் தத்தும், அவரது உறவினர்களும் என்னை ஏமாற்றியதுடன், அச்சுறுத்தியும், கொலை மிரட்டல் விடுத்தும், பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்து வருவதாகவும், தனக்கு மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் தொழில் ரீதியாகவும் துன்புறுத்தல்கள் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அதனால், மேற்படி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 16 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி இன்று கைது செய்யப் பட்டுள்ளார்.
அண்மையில் ஓடிடியில் வெளியான "கடாவர்" திரைப்படத்தை தயாரித்தார். இது குறித்து போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அமலா பாலின் பெயரைக் குறிப்பிடாமல் திரைப்பட நடிகை ஒருவர் என குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.