அரும்பாக்கம் ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது: தட்டிக்கேட்டதால் கொலை செய்ததாக போலீஸ் தகவல்

அரும்பாக்கம் ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது: தட்டிக்கேட்டதால் கொலை செய்ததாக போலீஸ் தகவல்
Updated on
1 min read

சென்னை: அண்ணா நகரில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை, அரும்பாக்கம், என்.எஸ்.கே. நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்தீப்குமார் (28). ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது கொலை வழக்கு உட்பட பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 26-ம் தேதி மதியம் அண்ணா நகர், இந்திரா நகர், கிருஷ்ணன் கோயில் பின்புறமுள்ள காலி இடத்தில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கும்பல் சந்தீப்குமாரை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியது.

இதுகுறித்து அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக கொலை தொடர்பாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற அரவிந்த்ராஜ் (25), இவரது தம்பி ரஞ்சித் (26), அமைந்தகரை கார்த்திக் என்ற மொட்டை கார்த்திக் (22), அரும்பாக்கம் சரவணன் (30), அதே பகுதி ராஜா (27), அண்ணா நகர் குலோத்துங்கன் (26) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொலைக்கான காரணம்

கொலை செய்யப்பட்ட சந்தீப்குமாரின் நண்பர்கள் வினோத், மற்றொரு கார்த்திக். இவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த்ராஜ் மற்றும் ராஜாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால், கோபம் அடைந்த அவர்கள், வினோத் மற்றும் கார்த்திக்கை தாக்கியுள்ளனர். அடி வாங்கிய இருவரும் இதுகுறித்து தனது நண்பரான சந்தீப்குமாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர், அரவிந்தராஜை தட்டிக் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்த முன் விரோதத்தில் அரவிந்த்ராஜ் தனது நண்பர்களுடன் சென்று சந்தீப் குமாரை கொலை செய்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

கைது செய்யப்பட்ட அரவிந்த்ராஜ், அவரது தம்பி ரஞ்சித் ஆகியோர் அரும்பாக்கம் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். சரவணன் மற்றும் ராஜா மீதும் குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in