மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்.பி.எஃப். பெண் காவலருக்கு கத்திக்குத்து: மர்ம நபரைத் தேடும் ரயில்வே போலீஸார்

மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்.பி.எஃப். பெண் காவலருக்கு கத்திக்குத்து: மர்ம நபரைத் தேடும் ரயில்வே போலீஸார்
Updated on
1 min read

சென்னை: மின்சார ரயிலில், பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.) பெண் காவலரை கத்தியால் குத்திய நபரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்படத் தயாராக இருந்தது. இந்த ரயிலின் முன்பக்கம், பின்பக்கத்தில் தலா ஓர்ஆர்.பி.எஃப். பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ரயிலின் முன்பக்கத்தில் உள்ள மகளிர் பெட்டியில் ஆர்.பி.எஃப். காவலர் ஆசிர்வா(29) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒருவர் அங்கு வந்து, மகளிர் பெட்டியில் ஏற முயன்றார். அவரை காவலர் ஆசிர்வா தடுத்து, "இந்தப் பெட்டியில் மகளிர் மட்டும் பயணிக்க முடியும். இதில் நீங்கள் பயணிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ஆசிர்வாவின் கழுத்தில் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அப்போது மெதுவாக நகர்ந்த ரயிலில் இருந்து ஆசிர்வா குதித்தார். தொடர்ந்து, சக பெண் காவலருக்கு தகவல் கொடுத்தார். அவரின்துணையுடன் பெரம்பூர் ரயில்வேமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைக் கத்தியால் குத்திய நபர் மீது எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in