Published : 17 Aug 2022 06:36 PM
Last Updated : 17 Aug 2022 06:36 PM

திருப்பூர் | மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்த அடுத்த மூலனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (53). கட்டிடத் தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், போலீஸார் வழக்கு பதிந்து பழனிச்சாமியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பளித்தார். இதில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரமும் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். இதையடுத்து பழனிச்சாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நெசவுத் தொழிலாளிக்கு சாகும் வரை சிறை: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் அலி (40). நெசவுத் தொழிலாளி. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்பாஸ் அலி, 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, போக்சோ சட்டத்தின் கீழ் அப்பாஸ் அலியை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அப்பாஸ் அலிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து அப்பாஸ் அலியை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x