Published : 10 Aug 2022 04:16 PM
Last Updated : 10 Aug 2022 04:16 PM

கரூர் | பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கரூர்: பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூரை சேர்ந்தவர் வடிவேல் (30). இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து நச்சலூர் மேலநந்தவனக்காட்டையை சேர்ந்த வேலு என்ற வேலுசாமி (38), நச்சலூர் விஆர்ஓ காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் (35), நச்சலூர் தாட்கோ காலனியைச் சேர்ந்த சங்கர் (24) ஆகிய 3 பேர் வடிவேலுவிடம் இது குறித்து விசாரித்து, அவரை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதில் வடிவேலு படுகாயமடைந்துள்ளார்.

வேலுசாமி, சதீஷ்குமார், சங்கர்

இதையடுத்து இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்க வேண்டாம். நாங்களே அவருக்கு சிகிச்சை அளிக்கிறோம் என வடிவேலு குடும்பத்தினரிடம் கூறிவிட்டு மேற்கண்ட 3 பேரும் அவரை விபத்தில் காயமடைந்து விட்டதாகக் கூறி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் வடிவேல் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி சண்முகசுந்தரம் இன்று தீர்ப்பு அறிவித்தார். அதில்,“வடிவேலுவை ஆபாசமாக திட்டியதற்காக 3 பேருக்கும் 15 நாள் சிறைத் தண்டனை, ரூ.100 அபராதம் அதைக் கட்டத் தவறினால் 7 நாள் சிறை தண்டனை. கொலை செய்த குற்றத்திற்காக 3 பேருக்கும் தலா ஒரு ஆயுள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் அதை கட்டத் தவறினால் மேலும் ஒராண்டு சிறை, அடித்து காயப்படுத்திவிட்டு அதனை விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தடயத்தை மறைத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் அதனை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்" என்று தீர்ப்பு அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x