Published : 09 Aug 2022 06:47 AM
Last Updated : 09 Aug 2022 06:47 AM

திருவள்ளூர் | தோழிக்கு கொடுப்பதற்காக மனைவி, தாயாரின் 550 சவரனை திருடிய தொழிலதிபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, முத்துநகரை சேர்ந்தவர் தொழிலதிபர் சேகர்(40). இவரது சகோதரர் ராஜேஷ் (37). இவர்கள் இருவரும் திருமணமாகி தங்களது தாயார் தமிழ்ச் செல்வியுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும், சகோதரர்கள் இருவரும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சேகரின் மனைவி வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது, வீட்டில் அவரது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 300 சவரன் நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், சேகரின் தாயார் தமிழ்ச் செல்வியின் 200 சவரன் நகை, 5 தங்கக் கட்டிகள் உட்பட மொத்தம் வீட்டிலிருந்த 550 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து, பூந்தமல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தினர். அதில் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது தோழியான இளம் பெண் ஒருவரிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறும்போது, சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு,சேகருக்கும் வேளச்சேரி கேசரிபுரத்தைச் சேர்ந்த ஸ்வாதி(22) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டில் இருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்று சேகர் ஸ்வாதியிடம் கொடுத்துள்ளார்.

ஸ்வாதிக்கு காரும் வாங்கிக் கொடுத்ததாக தெரியவந்தது. இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து சேகர் மற்றும் ஸ்வாதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x