Published : 09 Aug 2022 04:30 AM
Last Updated : 09 Aug 2022 04:30 AM

‘டிடெக்டிவ் ஏஜென்சி’ என்ற பெயரில் -பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிப்பு: 2 பொறியாளர்கள் கைது

கைது செய்யப்பட்ட சதீஷ்குமார், பிரசாத்.

திருச்சி

‘டிடெக்டிவ் ஏஜென்சி' என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்த 2 பொறியாளர்களை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். குடும்பத்தினரை உளவுபார்ப்பதற்காக சிலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துஇவர்களிடம் ஏமாந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் மெர்வின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது உறவினர் ஒருவர் குறித்த ரகசிய விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக, துப்பறியும் ஏஜென்சியை நாட விரும்பினார். இதற்காக இணையதளம் வழியாக தேடி, ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியை தொடர்பு கொண்டு, ஒரு நபர் குறித்த விவரங்களை சேகரித்து தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதற்க அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளனர். இதற்கு ஒப்புக்கொண்ட மெர்வின், அவர்களை நேரில் சந்தித்து அவர்கள் கேட்ட பணத்தையும் கொடுத்துள்ளார். அதற்குப்பின் பல மாதங்களுக்குப் பிறகும், அவர் கேட்ட ரகசிய விவரங்களை டிடெக்டிவ் ஏஜென்சி எனக்கூறிய நபர்கள் கண்டுபிடித்துத் தரவில்லை.

இது குறித்து கேட்டதற்கு சரியான பதிலும் அளிக்கவில்லை. இதனால்சந்தேகமடைந்த அவர், இதுதொடர்பாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். டிஎஸ்பி பால்வண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீஸார் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்களம் கிராமத்தைச் சேர்ந்த ச.சதீஷ்குமார் (36), ச.பிரசாத் (20) ஆகியோர் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x