Published : 06 Aug 2022 06:47 AM
Last Updated : 06 Aug 2022 06:47 AM

தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி கையாடல்: 2 ஆண்டு தலைமறைவாக இருந்த முன்னாள் ஊழியர் கைது

சென்னை: தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி கையாடல் செய்து, தலைமறைவாக இருந்த முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, அமைந்தகரையில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவன உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான அமர் ரகுமான் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 2020-ம் ஆண்டில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார்.

அதில், “எனது நிறுவனத்தில் பாரிமுனை, பிடாரியார் கோயில் தெரு, 1-வது சந்து பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான் (36), கார்த்திக் ஆகியோர் பணி செய்தனர். நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து காசோலையில் கையொப்பமிட்டு பணம் எடுக்கும் அதிகாரத்தை அவர்கள் இருவருக்கும் கொடுத்திருந்தேன்.

இதை பயன்படுத்தி இருவரும், நான் வெளிநாடு சென்ற சமயத்தில் ரூ.5 கோடி வரை பணம் எடுத்து அவர்களின் சொந்த தேவைக்கு பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். எனவே, அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த அப்போதைய ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவில் உள்ள ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக கார்த்திக்கை 2020 பிப்ரவரி 3-ம் தேதி கைது செய்தனர்.

ஆனால், கலீல் ரகுமான் 2 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டில் பதுங்கி இருந்த கலில் ரகுமானை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x