கொல்லப்பட்ட மனைவியின் சடலம் ஆந்திர அருவி பகுதியில் மீட்பு: கணவர், நண்பர்களிடம் போலீஸார் விசாரணை

கொல்லப்பட்ட மனைவியின் சடலம் ஆந்திர அருவி பகுதியில் மீட்பு: கணவர், நண்பர்களிடம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மதன். இவரது மனைவி தமிழ்ச் செல்வி. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் தமிழ்ச்செல்வி திடீரென காணாமல் போனார். ஆனால், இதுகுறித்து மதன் வெளியில் யாரிடமும் கூறவில்லை. இதற்கிடையே, தனது மகளை கண்டுபிடித்துத் தரக்கோரி, தமிழ்ச்செல்வியின் பெற்றோர் செங்குன்றம் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணவர் மதனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், மனைவி தமிழ்ச்செல்வியை கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ள கோனே அருவிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, செங்குன்றம் போலீஸார் ஆந்திர மாநில போலீஸார் உதவியுடன் இணைந்து கோனே அருவி உள்ள வனப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால், எந்தவித தடயமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கோனே அருவி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் மீண்டும் நேற்று அந்த இடத்தில் தேடியதில் அங்குள்ள காய்ந்த மரக்கிளை மற்றும் இலைகளால் மூடப்பட்டு அழுகிய நிலையில் தமிழ்ச்செல்வியின் உடல் இருப்பது தெரியவந்தது.

அவர் அணிந்து இருந்த உடையை வைத்து உடலை பெற்றோர் அடையாளம் காட்டினர்.

இதையடுத்து போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக மதனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மதன் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்தது தெரியவந்தது. மதனின் நண்பர்கள் 2 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in