வில்லியனூர் அருகே அரசுப் பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவர் கைது

வில்லியனூர் அருகே அரசுப் பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவர் கைது

Published on

புதுச்சேரி: வில்லியனூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் புகுந்து, பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி தர்மாபுரி தனகோடி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (39). இவர் வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தில் உள்ள அண்ணாமலை ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இப்பள்ளி யில் கடந்த 5 வருடத்துக்கு முன்பு கூடப்பாக்கத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவர் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்தார்.

இதற்கிடையே பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியின் போது 7-ம் வகுப்பு மாணவர் ஒருவரை பூவரசன் கடுமையாக தாக்கினார். அப்போது பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஆசிரியர் கண்ணன் இருந்ததால் பூவரசன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து மாற்று சான்றிதழ் கொடுத்து பள்ளியில் இருந்து பூவரசனை அனுப்பியுள்ளார். பின்னர் மீண்டும் ஒரு வருடம் கழித்து பூவரசன் அதே பள்ளியில் சேர்ந்து படித்துள்ளார்.

அப்போது மீண்டும் சக மாணவர்களை பூவரசன் தாக்கி பிரச்சினை செய்து வந்ததால் அவரை மீண்டும் பள்ளியில் இருந்து நீக்கினர். இதனால் ஆசிரியர் கண்ணன் மீது பூவரசன் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர் கண்ணன் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த பூவரசன் திடீரென ஆசிரியர் கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து ஆசிரியர் கண்ணன், மேலதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து அவர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in