

சேலம்: ஆத்தூரில் பழ வியாபாரியை கடத்த முயன்ற தலைமைக் காவலர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் வடக்கு தில்லை நகரைச் சேர்ந்தவர் பழ வியாபாரி அன்பரசன்.
இவர், சேலம் டவுனில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் ராம்மோகன். இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணினி பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு இருவரும் சேர்ந்து சேலம் டவுனில் பழம் வியாபாரம் செய்தனர். இதில், தலைமைக் காவலர் ராம்மோகனுக்கு அன்பரசன் ரூ.45 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆத்தூர் ராமநாயக்கன்பட்டி வசிஷ்டநதி பாலத்தில் சென்று கொண்டிருந்த அன்பரசனை, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி கடத்த முயன்றது. அவர்களிடமிருந்து தப்பிய அன்பரசன் ஆத்தூர் ரூரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், ராம்மோகனுக்கு, அன்பரசன் கொடுக்க வேண்டிய ரூ.45 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகவும், அதனால், ராம்மோகன் ரவுடிகளை அனுப்பி அன்பரசனை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமைக் காவலர் ராம்மோகன், வீராணம் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் (31), ஆனந்தன் (26), பள்ளப்பட்டியைச் சேர்ந்த பிரசாந்த் (27), ஆனந்தராஜ் (21), பன்னீர்செல்வம் (23) ஆகியோரை கைது செய்து, ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.