

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் செங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் செந்தாமரைக்கண்ணன் (55). இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இரண்டாவது மனைவி கமலா (50). இவருக்கு குரு (17) என்ற மகன் உள்ளார்.
இவர் தற்போது ஐடிஐ-யில் சேர்ந்துள்ளார். தாயும், மகனும் செங்கல்பட்டி கிராமத்தில் வசித்து வந்தனர். இவர்கள் வசிக்கும் வீட்டில் இருந்து நேற்று காலை புகை வந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டியிருந்துள்ளது.
தகவல் அறிந்த கல்லாவி போலீஸார் தீயணைப்பு வீரர்களுடன் நேரில் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, வீட்டுக்குள் கமலாவும், குருவும் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தனர். ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்து இருவரையும் எரித்துக் கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், கொலையில் ஈடுபட்டவர்கள், கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.