விருத்தாசலத்தில் 500 பேரிடம் வீட்டுமனை வழங்குவதாக ரூ.1 கோடி மோசடி செய்த 3 பேர் கைது
விழுப்புரம்: விருத்தாசலத்தில் வீட்டுமனை வழங்குவதாக 500 பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி சித்ரா. இவர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த பரணிதரன், பாலாஜி, பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகியோர், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வீட்டுமனை வழங்குவதாக கூறி சுமார் 500 நபர்களிடம் ரூ.1 கோடி வரை வசூல் செய்தனர்.
ஆனால் எங்களுக்கு வீட்டுமனையை பதிவு செய்து கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் கேட்ட போது மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறி இருந்தார்.
இது தொடர்பாக பொருளா தார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நேற்று, பரணிதரன், பாலாஜி, இளங்கோவன் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் சென்னை தமிழ்நாடு வைப்பீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள பார்த்தசாரதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
