Published : 02 Jul 2022 07:51 AM
Last Updated : 02 Jul 2022 07:51 AM

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற லட்சுமி, சரஸ்வதி உலோக சிலை மீட்பு: 2 பேர் கைது

மீட்கப்பட்ட லட்சுமி, சரஸ்வதி உலோக சிலைகள்.

சென்னை: வெளிநாட்டுக்கு லட்சுமி, சரஸ்வதி உலோக சிலைகளை கடத்த முயன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணத்தை சேர்ந்த சிலர்,புராதன லட்சுமி, சரஸ்வதி உலோக சிலைகளை விற்க முயற்சி செய்வதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன் உத்தரவிட்டனர். இதன்படி, மதுரைகூடுதல் கண்காணிப்பாளர் மலைச்சாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூரை சேர்ந்த ரஞ்சித் (22), கும்பகோணம் உதயகுமார் (40) ஆகியோர், ஒரு அடி உயரம், அரை அடி அகலம், சுமார் 4 கிலோஎடை கொண்ட சரஸ்வதி உலோக சிலை, 4 அடி உயரம், சுமார் 2 கிலோ எடை கொண்ட லட்சுமி உலோக சிலை ஆகியவற்றை வைத்திருப்பதை போலீஸார் உறுதி செய்தனர். இந்த சிலைகளை அவர்கள் வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து சிலைகளை கைப்பற்றுவதற்காக தனிப்படை போலீஸார், சிலை வாங்குபவர்கள்போல அவர்களிடம் செல்போனில் தொடர்புகொண்டனர். சிலைகளை கொண்டுவருமாறும், அவற்றை பார்த்துவிட்டு விலை பேசிக் கொள்ளலாம் எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.

ரூ.2 கோடிக்கு பேரம்

இதை நம்பிய இருவரும், ரூ.2 கோடிக்கு சிலைகளை பேரம்பேசினர். பின்னர், போலீஸார் கூறியபடி, அந்த சிலைகளை கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது, அங்கு மாறுவேடத்தில் இருந்த போலீஸார் சுற்றிவளைத்து, ரஞ்சித், உதயகுமார் ஆகியோரை கைது செய்து, 2 சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் விசாரணை செய்தபோது, ‘‘இந்த சிலைகளை விற்பனை செய்வதற்காக சிலர் கொடுத்தனர். எந்த கோயிலில் இருந்து இவை திருடப்பட்டது என்ற விவரம் அவர்களுக்குத்தான் தெரியும்’’ என்று தெரிவித்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இரு சிலைகளும் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x