Published : 30 Jun 2022 06:17 AM
Last Updated : 30 Jun 2022 06:17 AM

கோயில் வளாகத்தில் தூங்கியவரை கொலை செய்த வழக்கில் வங்கி ஊழியருக்கு ஆயுள் சிறை

கோவை: கோயில் வளாகத்தில் தூங்கியவரை கொலை செய்த வங்கி ஊழியருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையை அடுத்த பனைமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் திருநங்கையை திருமணம் செய்துகொண்டு அப்பகுதியில் வசித்து வந்தார்.

அவர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக திருநங்கை கோபித்துக்கொண்டு பெங்களூரு சென்றுவிட்டார். இதனால் ரமேஷ் அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் தங்கி வந்தார். அதேபகுதியை சேர்ந்த வங்கி ஊழியரான கவின் (27) என்பவரும், அந்த கோயிலுக்கு வந்து படுப்பது உண்டு.

இந்நிலையில், கடந்த 2020 ஜூன் 7-ம் தேதி கவின் அங்கு படுத்திருந்தபோது, அவரை ரமேஷ் எழுப்பி தவறான உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கவின், கத்தியால் ரமேஷை குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செல்வபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கவினை கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகள் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்தநிலையில் நீதிபதி டி.பாலு நேற்று தீர்ப்பளித்தார். அதில், கவினுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் க.கார்த்திகேயன் ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x