சோழவரம் அருகே ரவுடி கொலை ஆட்டோவில் தப்பிய 2 பேர் கைது

சோழவரம் அருகே ரவுடி கொலை ஆட்டோவில் தப்பிய 2 பேர் கைது
Updated on
1 min read

பொன்னேரி: சோழவரம் அருகே நேற்று அதிகாலை ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் மதி என்கிற மதிவாணன் (26). ரவுடியான இவர் மீது சோழவரம் மற்றும் மீஞ்சூர் காவல்நிலையங்களில் கொலை, கூட்டுக் கொள்ளை உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் மதிவாணன் தன் கூட்டாளிகளான ஹேம்நாத், சரத்குமார், தனுஷ் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த 4 பேர்கும்பல், மதிவாணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. மற்ற 3 பேரையும் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியது. இதில் மதிவாணன் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்துவிட்டு, ஆட்டோவில் தப்பி வந்த நத்தமேடு மற்றும் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, ராம்கி ஆகியோர் போலீஸார் நடத்திய வாகன தணிக்கையின்போது சிக்கினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் சம்பவ இடம் விரைந்த சோழவரம் போலீஸார், மதிவாணனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மற்ற 3 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சூர்யா, ராம்கி ஆகியோரை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு நடந்தகஞ்சாமணி கொலைக்கு பழிக்குப்பழியாக மதிவாணனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், இந்த கொலை தொடர்பாக தப்பியோடிய பிரபாகரன், சீனு ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in