Published : 28 Jun 2022 06:06 AM
Last Updated : 28 Jun 2022 06:06 AM

புதுச்சேரி | சிறுமிக்கு பாலியல் கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்தவர் வினோத் என்ற வினோத்குமார் (32). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 2017ல் 16 வயது சிறுமியை கோயில் திருவிழாவின்போது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுபற்றி அச்சிறுமி தனது வீட்டில் தெரிவித்துள்ளார். அதையடுத்து வில்லியனூர் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. இவ்வழக்கை உதவி ஆய்வாளர் வெள்ளையன், ஏஎஸ்ஐ அருள் ஆகியோர் விசாரித்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் இறுதி விசாரணை நடத்தி வினோத்தை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.

இவ்வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வினோத்துக்கு 366 பிரிவின் கீழ் (கடத்தல்) 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், போக்சோ வழக்கு (பிரிவு4-ன் கீழ் பாலியல் வன்கொடுமை) 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இத்தண்டனையை ஏககாலத்தில் (மொத்தமாக 10 ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும் என்று தீர்பளிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம்அரசு இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு சிறப்பு வழக்கறிஞராக பாலமுருகன் இவ்வழக்கில் ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x