Published : 26 Jun 2022 04:30 AM
Last Updated : 26 Jun 2022 04:30 AM

விருதுநகர் | பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.15 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு

விருதுநகர்

விருதுநகரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.14.83 லட்சம் பெற்று மோசடி செய்ததாக கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த ராஜேசேகர் மனைவி ராணி (39). தற்போது எஸ்.மீனாட்சிபுரத்தில் வசித்து வருகிறார். 2016-ம் ஆண்டு பாண் டியன் நகரில் வசித்தபோது தனது கணவருடன் பணியாற்றிவந்த சந்திரபோஸ் என்பவரும் அவரது மனைவி ஹேமா ஆகியோர் பழக்கமாகி உள்ளனர்.

அப்போது, ஹேமாவின் தம்பி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற்று வருவதாகவும், அதனால் ராணி யையும் முதலீடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதை நம்பிய ராணி, தனது கணவரின் ஓய்வூதியத் தொகையிலிருந்து கடந்த 2016-ல் ரூ.5 லட்சம், அதைத்தொடர்ந்து, 2017 வரை பல்வேறு தவணையாக மொத்தம் ரூ.14.83 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும், பங்குச் சந்தை நிலவரம் பற்றி பதில் தெரிவிக்காமலும், மூவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

மேலும், பங்குச் சந்தைக்கான எந்த ஆவணமும் கொடுக்காமலும் பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் நம்ப வைத்து மோசடி செய்ததாக எஸ்.பி மனோகரிடம் ராணி புகார் அளித்துள்ளார். அதையடுத்து, சிவக்குமார், ஹேமலதா, சந்திரபோஸ் ஆகியோர் மீது விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x