Published : 25 Jun 2022 06:43 AM
Last Updated : 25 Jun 2022 06:43 AM

சென்னை | பஞ்சலோக மாரியம்மன், பெருமாள் சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற இருவர் கைது: ஒருவருக்கு வலை

சென்னை: பஞ்சலோக மாரியம்மன், பெருமாள் சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற இருவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த மகிமைதாஸ் (44) வீட்டில் ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் மற்றும் பெருமாள் ஆகிய இரு பஞ்சலோக சிலைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி செய்ததாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோர் உத்தரவின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தனிப்படை போலீஸார் சிலைகளை வாங்குபவர்கள்போல நடத்து, மகிமைதாஸை தொடர்பு கொண்டனர். சிலைகளை நேரில் கொண்டுவரும்படியும், அவற்றை பார்வையிட்ட பின்னர் விலைபேசலாம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இரு சிலைகளையும் இருப்புக்குறிச்சி-அரசக்குழு சாலை பகுதிக்கு கொண்டுவந்த மகிமைதாஸை சுற்றி வளைத்த போலீஸார், அவரிடமிருந்த 2 சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், விருத்தாசலம் பெரியகோட்டிமுளை பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து(42), ஒரு கோயிலில் அந்த சிலைகளைத் திருடியதாகக் கூறி தன்னிடம் கொடுத்து, அவற்றை விற்றுக் கொடுக்கும்படி கூறியதாக மகிமைதாஸ் தெரிவித்தார். தொடர்ந்து பச்சமுத்துவையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய அரியலூர் முருகானந்தம் என்பவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட சிலைகள் எந்தக் கோயிலில் இருந்து திருடப்பட்டவை என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x