

கோவை: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (37). இவர், பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது, கலாமணி (எ) மல்லிகாவுடன் (37) பழக்கம் ஏற்பட்டுள்ளது. கலாமணியின் கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். மகனும், மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கலாமணியை, பாண்டியராஜன் தனது சொந்த ஊரான ஜெயமங்கலத்துக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்துகொண்டார். பின்னர், இருவரும் தொண்டாமுத்தூர் சென்று வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இருவருக்கும் குடிப் பழக்கம் இருந்ததால், இரவு நேரங்களில் அடிக்கடி சண்டை போட்டுவந்துள்ளனர்.
கடந்த 2021 ஜூலை 8-ம் தேதி இரவுஇருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாண்டியராஜன், கலாமணியின் கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்தார். தொண்டாமுத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாண்டியராஜனை கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி டி.பாலு நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், பாண்டியராஜனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் க.கார்த்திகேயன் ஆஜரானார்.
சம்பவம் நடைபெற்று ஓராண்டுக்குள் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.