

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் பெயர், புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி மோசடி முயற்சி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் பணியாற்றி வருகிறார். இவரது பெயர் மற்றும் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி, ஆட்சியர் கேட்பது போல், மர்மநபர் ஒருவர் மோசடியாக பணம் வசூலிக்க முயன்ற விவகாரம் இன்று ஆட்சியரின் கவனத்துக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து அவரது சார்பில், இவ்விவகாரம் தொடர்பாக மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீஸார் மர்மநபர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை: இதுதொடர்பாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாட்ஸ் அப் எண் எனக்கூறிக்கொண்டு, மர்ம நபர்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் சிலரின் தொலைபேசி எண்ணுக்கு தவறான கருத்துகளை குறுஞ்செய்தியாக அனுப்பி பணமோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன் செயல்படுவது தெரியவருகிறது.
மேற்கண்ட நபர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால், போலீஸார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட ஆட்சியரின் பெயர், புகைப்படத்துடன் தெரியாத எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். இதுதொடர்பாகவும், பொய்யான தகவல்கள் வந்தாலும் போலீஸாரிடம் புகார் அளிக்கலாம்,’’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியர் தனது ட்விட்டர் பக்கம் மூலமும், தனது பெயரில் வாட்ஸ்அப் மூலம் மர்மநபர் மோசடி செய்கிறார், அதை நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார்.